Latest News

ராமேஸ்வரத்தில் பரபரப்பு.. மதுரை ஆதீனத்தை இந்து மதத்தை விட்டு தள்ளி வைத்தது இந்து மக்கள் கட்சி!


எதை எடுத்தாலும் பஞ்சாயத்து செய்வது என்பதற்கு இதுதான் சரியான உதாரணம்.. இஃப்தார் விருந்தில் கலந்து கொண்டு நோன்புக் கஞ்சி குடித்து விட்டார் மதுரை ஆதீனம்.. இதுதான் மதுரையில் லேட்டஸ்ட் பஞ்சாயத்து. தற்போது மதுரை ஆதீனத்தை இந்து மதத்தை விட்டே தள்ளி வைத்துள்ளது இந்து மக்கள் கட்சி. இந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளார் ஆதீனம் என்று சில இந்து அமைப்புகள் அவருக்கு எதிராக கச்சை கட்டி கிளம்பியுள்ளன. ஆனாலும் ஆதீனம் வழக்கம் போல "சிவ சிவா" என்று தன் பாட்டுக்கு ஆதீன மடத்தில் அமைதி காத்து வருகிறார்.

அதிமுக பொதுசெயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா, 20 வது ஆண்டாக இஸ்லாமிய மக்களுக்கான அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார். 20 வது ஆண்டாக நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தொழில் மையத்தில் கடந்த 2 ம் தேதி சென்னையில், நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதுரை ஆதினமும் பங்கேற்றார். மேலும் இஸ்லாமிய கோட்பாட்டின்படி வழங்கப்படும் நோன்பு கஞ்சியையும் அருந்தினார் மதுரை ஆதினம். இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு சமுதாயத்தினரும் பங்கேற்று வாழ்த்திய சமத்துவ விழாவாக இது அமைந்தது. இந்து மத அமைப்பினர் மத்தியில் இது கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மடத்தின் ஆதினமாக இருக்கும் அவர், மற்றொரு மதம் தொடர்பான சடங்கில் பங்கேற்று கஞ்சி அருந்திய செயல், இந்து மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது என இந்து மத அமைப்புகள் போராடத் தொடங்கியுள்ளனர். இதன் வெளிப்பாடாக இந்து மக்கள் கட்சியினர், மதுரை ஆதினத்தை இந்து மதத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், அமாவாசை தினமான இன்று காலை, இதுதொடர்பான பூஜை புனஸ்கார நிகழ்ச்சிகளில் இந்து மக்கள் கட்சியினர் இன்று ஈடுபட்டனர். அதன் மாநில பொதுச் செயலாளர் ராம்குமார்தான், இந்து மதத்தை விட்டு ஆதீனத்தை தள்ளி வைக்கும் பூஜையை நடத்தினார். மதுரை ஆதினத்தின் படத்தை வைத்து சங்கு சங்கல்ப பூஜை செய்து, ஆதினத்தை இந்து மதத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர். பின்னர் ஆதினத்தின் படத்தை கடலில் விட்டனர். இந்து மதக் கோட்பாடுகளுக்கு எதிராகச் தொடர்ந்து செயல்பட்டு வரும் மதுரை ஆதினத்தை இந்து மதத்தில் உள்ள அனைத்து ஆதினங்களும் புறக்கணிக்க வேண்டும் எனவும் ராம்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு நோன்பு கஞ்சி குடித்ததற்கு இதற்கு இப்படி இந்து மதத்தை விட்டு தள்ளி வைப்பதா என்று ஆதீனத்தின் மைண்ட் வாய்ஸ் பேசுகிறது. பல சலசலப்புகளை, சர்ச்சைகளைப் பார்த்த மதுரை ஆதீனம் இந்த "அட்டாக்"கை எப்படி சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.